2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஈரானுக்குச் சென்றுள்ளது குறித்து...
பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் அரசு முறைப் பயணமாக ஈரான் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் தலைமையில், பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அரசு முறைப் பயணமாக, புதன்கிழமை (ஏப். 15) அன்று ஈரான் சென்றுள்ளார். தலைநகர் தெஹ்ரான் வந்த தளபதி ஆசிம் முனீர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோரை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
Advertisement
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் அறிவிக்கப்பட்ட 2 வார போர்நிறுத்தம் முடிவடைய இருப்பதால், விரைவில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானிய படைகள் வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியது குறிப்பிடத்தக்கது.