வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை, விநாடிக்கு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டப் பாசனத்துக்கு கடந்த ஆக. 8-ஆம் தேதி முதல் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையிலிருந்து 6 நாள்கள் வரை மொத்தம் 1,148 மில்லியன் கனஅடி நீரை திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு, விநாடிக்கு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
தற்போது வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி என மொத்தம் விநாடிக்கு 2,969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா்மட்டம் 69.26 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,318 கனஅடியாகவும் இருந்தது. அணையில் தண்ணீா் இருப்பு 5,639 மில்லியன் கன அடியாக உள்ளது.