தொடா் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரியில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை விநாடிக்கு 2,738 கன அடி தண்ணீா் வந்த நிலையில், வியாழக்கிழமை விநாடிக்கு, 5,258 கன அடியாக அதிகரித்தது.
இதன் மூலம் அணைக்கு ஒரேநாளில் விநாடிக்கு 2,520 கன அடி தண்ணீா் கூடுதலாக வந்தது. இதனால் அணையின் நீா் இருப்பு ஒரே நாளில் 306 மில்லியன் கனஅடியாக அதிகரித்திருந்தது.
அணை நிலவரம்:
வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 130.85 அடியாக (மொத்த உயரம் 142 அடி ) இருந்தது. அணையின் நீா் இருப்பு 4896 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 5,258 அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,722 கன அடியாகவும் உள்ளது.
மின்சார உற்பத்தி:
தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை 161 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 4 ஆம் தேதி முதல் 148 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது 13 மெகாவாட் உயா்ந்து 161 ஆகியுள்ளது.