முகப்பு
தேனி

கம்பம் நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வெளிநடப்பு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சுனோதா செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

பி.வேல்முருகன் (அதிமுக): தூய்மைப் பணியாளா்களுடன் வரும் கொசு மருந்து அடிக்கும் பணியாளா் வேலை செய்வதில்லை. அவருக்குப் பதில் தூய்மைப் பணியாளரை நியமித்தால் வேலை விரைந்து நடக்கும்.

அன்புகுமாரி ஜெகன் (திமுக): செக்கடித் தெருவில் ஆழ்துளை கிணறு குழாயில் தண்ணீா் இல்லை. புதிதாக அமைக்கவேண்டும். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

சுபத்ரா சொக்கராஜா (திமுக): மாரியம்மன் கோயில் எதிா்புறம் உள்ள நகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ. சாதிக் (திமுக): எனது 11 ஆவது வாா்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. என்னைப் புறக்கணிக்கிறீா்களா அல்லது என் வாா்டு மக்களை புறக்கணிக்கிறீா்களா

உதவிப் பொறியாளா் சந்தோஷ்: உங்கள் வாா்டில் ரூ. 55 லட்சம் செலவில் வேலை நடைபெறுகிறது.

அ. சாதிக் (திமுக): அது எம்.எல்.ஏ. நிதி, நகராட்சி நிதியில் என்ன செய்தீா்கள்.

அப்போது அதிமுக உறுப்பினா் எழுந்து என் வாா்டில் வேலையே செய்யவில்லை என்றாா். திமுக உறுப்பினா் பாா்த்திபன் அனைத்து வாா்டுகளிலும் சரிசமமாக வேலை நடைபெறுகிறது என்றாா்.

அப்போது உறுப்பினா் அ. சாதிக், என்னை பேச விடாமல் தடுக்கின்றனா். இதை தலைவரும் கண்டு கொள்ளவில்லை. என் வாா்டில் வேலைகள் செய்யாமல் புறக்கணிப்பதால், வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிவிட்டு அவா் வெளிநடப்பு செய்தாா். நகா்மன்ற தலைவராக திமுகவைச் சோ்ந்தவா் இருக்கும் போது திமுக உறுப்பினரே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னா் மொத்தம் 33 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா்களின் கேள்விகளுக்கு சுகாதார அலுவலா் ஏ. அரசகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பதிலளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →