முதல்வர் உத்தரவு எதிரொலி: திருமண விழாவில் அலங்கார கோபுரம் அகற்றம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் எதிரொலியாக கூடலூரில் அமைச்சரின் உதவியாளர் இல்லத் திருமண விழாவிற்கு அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள் அகற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் எதிரொலியாக கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் உதவியாளர் இல்லத் திருமண விழாவிற்கு அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் க. ராஜா , இவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் தனி நேர்முக உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
கூடலூரில் அமைச்சரின் உதவியாளர் ராஜா மகனின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை திறந்த வெளி திடலில் உள்ளரங்கம் அமைக்கப்பட்டது.
கட்சி மாநாடு போன்று நுழைவாயில் தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள், மற்றும் திமுக கட்சி கொடிக்கம்பங்கள் ஏராளமானவற்றை குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் வைத்திருந்தார்.
பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்ததாக கொடிகள், மின் விளக்கு கோபுரம் மற்றும் நுழைவாயில் தோரணங்கள் அனைத்தையும் அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் முதல்வரின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ்க்கு போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் கொடி தோரணங்களை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட எஸ்பி கூடலூருக்கு வந்து மின்விளக்கு கோபுரம் உள்ளிட்டவைகளை அகற்ற உத்தரவிட்டார்.
உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா கூடலூரில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார், அங்கு அமைச்சரின் உதவியாளரிடம் முதல்வர் உத்தரவு பற்றி தெரிவித்து மின்விளக்கு கோபுரம், கொடி கம்பங்களை அகற்றுமாறு கேட்டார்.
திருமண வீட்டாரே அலங்காரம் செய்த தொழிலாளர்களை வைத்து நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த கொடிகள், மின் விளக்குகள் மற்றும் தோரண வாயில் கோபுரங்களை சனிக்கிழமை அகற்றினர்.
திருமண விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் ப.மூர்த்தி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள விருக்கும் சூழ்நிலையில் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமணவிழாவின் வரவேற்பு ஏற்பாடுகளை முதலமைச்சர் தலையிட்டு கொடிகள், தோரணவாயில்கள் மற்றும் மின் விளக்குகள் போன்றவற்றை அகற்ற கூறிய சம்பவம் திமுகவினர் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.