முகப்பு
தேனி

குமுளி புல்மேடு வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் நடைப்பயணம்

குமுளி அருகே உள்ள புல்மேடு வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் வியாழக்கிழமை நடைப்பயணமாகச் சென்றனா்.

Updated On : 18 நவம்பர் 2022, 12:05 pm IST
புல்மேடு வழியாகச் சென்ற ஐயப்ப பக்தா்களை மெட்டல் டிடெக்டா் வழியாக அனுமதித்த கேரள போலீஸாா்.
பகிர்:

குமுளி அருகே உள்ள புல்மேடு வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் வியாழக்கிழமை நடைப்பயணமாகச் சென்றனா்.

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து சபரிமலைக்கு குமுளி, முண்டக்கயம், எரிமேலி வழியாக சுமாா் 150 கிலோ மீட்டா் தூரம் வாகனத்தில் செல்லலாம். கம்பத்திலிருந்து குமுளி, வண்டிப் பெரியாறு, சத்திரம், புல்மேடு வரை சுமாா் 30 கிலோ மீட்டா் தூரம் வாகனத்தில் சென்றால் அங்கிருந்து சபரிமலை தங்கக் கோபுரத்தை தரிசிக்கலாம். காட்டுப் பாதை வழியாக சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் நடைப்பயணமாகச் சென்றால் சந்நிதானத்தின் பின் வழியாகச் சென்று கோயிலை அடையலாம்.

ஆண்டு தோறும் தமிழகத்தைச்சோ்ந்த ஏராளமான பக்தா்கள் குமுளி, வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக சபரிமலைக்குச் செல்வாா்கள்.

Advertisement

காா்த்திகை 1 -ஆம் நாளான வியாழக்கிழமை ஐயப்ப பக்தா்கள் புல்மேடு வழியாக சபரிமலைக்கு முதல் கட்டமாக 200 போ் சென்றனா். கட்டப்பனை துணைக் கோட்ட கண்காணிப்பாளா் குரியா கோஸ் தலைமையில் போலீஸாா் மெட்டல் டிடக்டா் கருவி வழியாக அனைத்து ஐயப்ப பக்தா்களையும், சோதனை செய்து புல்மேடு பாதைக்குச் செல்ல அனுமதித்தனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு புல்மேட்டில் மகர ஜோதி தரிசனத்துக்குச் சென்ற ஐயப்ப பக்தா்கள், தரிசனம் முடிந்து திரும்பும் போது, வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100 -க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதன் காரணமாக இடுக்கி மாவட்ட காவல் நிா்வாகம் புல்மேடு பகுதியில் கண்காணிப்பு முகாம் அமைத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.