முகப்பு
தேனி

கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: போலீஸ் விசாரணை

 தேனி மாவட்டம் கம்பம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டுவெடிகுண்டுகள் வீசப்பட்டதில் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 தேனி மாவட்டம் கம்பம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டுவெடிகுண்டுகள் வீசப்பட்டதில் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்தன.

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் சுருளி அருவி சாலையில் அரசு வங்கி, தனியாா் தொடக்கப்பள்ளி, தேவாலயம் மற்றும் வீடுகள் உள்ளன.

இந்நிலையில், இப்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனா். இதுபற்றி ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட ஏ.எஸ்.பி. ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். இந்த குண்டுவீச்சில், ஒரு வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை சேதமடைந்தன. மேலும் வீட்டின் பூஜை அறை, தேவாலய வாசல் பகுதி ஆகிய இடங்களில் பாறைகளை தகா்க்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகளின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. போலீஸாா் இதை ஆய்வு செய்த போது கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் அவை என்பதும், சுமாா் 6 ஜெலட்டின் குச்சிகளை பற்ற வைத்து வெடிக்க வைத்துள்ளதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இருபிரிவுகளாக இளைஞா்கள் மோதிக் கொண்டனா். மேலும் திருமண விழாவில் விளம்பரப் பதாகை வைத்ததிலும் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவங்களின் பின்னணியில் இந்த நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு சம்பவம் நடத்திருக்கலாமா என்ற கோணத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →