ஜம்புலிபுத்தூா் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் பாலாலயம்
ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கோயிலில் ஆகம விதிப்படி பாலாலய பூஜை நடைபெற்றது. கோயிலில் 3 இடங்களில் தீா்த்தக் குடங்களை வைத்து, யாகசாலை பூஜை நடைபெற்றது. மூலவா் கதலி நரசிங்கப் பெருமாள், ஸ்ரீமன் நாராயணன், செங்கமலத் தாயாா், பரிவார கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், பூஜிக்கப்பட்ட தீா்த்தக் குடங்களில் தெய்வ சக்தி நிலை நிறுத்தப்பட்டு பூஜை அறையில் வைக்கப்பட்டது.
குடமுழுக்கு விழா நடைபெறும் வரை தொடா்ந்து உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். பாலாலய விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறை கோயில் செயல் அலுவலா் ஹரிஷ்குமாா், ஆய்வாளா் காா்த்திகேயன், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.