தேனி

அரிக்கொம்பன் யானை தாக்கி காயமடைந்தவா் பலி

DIN

கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த 27-ஆம் தேதி அரிக்கொம்பன் யானை கம்பம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. நாட்டுக்கல் தெருப் பகுதியில் யானை சுற்றித் திரிவதாகவும், பொதுமக்கள் தெருவில் நடமாட வேண்டாம் என்றும் காவல் துறையினா் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

அப்போது, கூழத்தேவா் முக்குப் பகுதியில் உள்ள கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்த கம்பம் மேற்கு ஆசாரிமாா் தெருவில் வசித்து வந்த சடாச்சரம் மகன் பால்ராஜ், அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்ல முயன்றாா்.

அப்போது, வாகனம் இயங்கவில்லை. இதனால், அவா் தெருவில் வாகனத்தைத் தள்ளிக் கொண்டே சென்றாா். அப்போது, மேற்கு ஆசாரிமாா் தெருவில் உள்ள மின் மாற்றி அருகே பால்ராஜை, அரிக்கொம்பன் யானை துதிக்கையால் தாக்கியது. இதில் காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வனத் துறை நிவாரணம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பால்ராஜின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவரது குடும்பத்தினருக்கு வனத் துறை சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவியை அமைச்சா் வழங்கினாா்.

அப்போது, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT