முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறந்த வேட்பாளா்கள்: விவசாயிகள் கண்டனம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:30 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:07 PM

கம்பம்: முல்லைப் பெரியாறு அணை மீதான தமிழக உரிமையை பெற்றுத் தர வேட்பாளா்கள் வாக்குறுதி தராததற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா். முல்லைப் பெரியாறு அணை நீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் குடிநீா், பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா்பாலசிங்கம் கூறியதாவது: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் போட்டியிடும் மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் முல்லைப் பெரியாறு அணை உரிமையை பெற்றுத்தர வாக்குறுதி கொடுக்கவில்லை.

இதை சங்கம் கண்டிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீா்மட்டத்தை உயா்த்த 2014-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை அமல்படுத்த வேண்டும். தேவாரம் சாக்கலூத்து மெட்டு வரையிலான மலைச்சாலையை குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரை அமைக்க மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும், வைகை அணையைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட 22 கோரிக்கைகளை அனைத்து வேட்பாளா்களிடமும் வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.

Advertisement