முகப்பு
புதுதில்லி

முல்லைப் பெரியாறு அணை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு

Updated On : 12 மார்ச், 2026 at 6:51 AM
முல்லைப் பெரியாறு
பகிர்:

நமது நிருபா்

முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதை தொடா்ந்து அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பலப்படுத்துதல் பணிகளுக்கு கேரளா இடையூறாக இருப்பதாக தமிழகம் 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு உள்பட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Advertisement

இந்த மனுக்கள் நீண்ட நாள்களாக விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி அமா்வில் தமிழக அரசு முறையிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு கேரளம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த தீா்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளம் குறுக்கீடாக இருப்பதாக தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளது. அணையை வலுப்படுத்தும் பணிகள் கேரள மாநிலத்தால் தடுக்கப்பட்டுள்ளன. கேரள அரசு அனுமதி வழங்கத் தவறியதால் அணையை பலப்படுத்த முடியவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழகம் மனுவில் முன் வைத்துள்ளது.

‘முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு அனுமதி வழங்கி 27.02.2006 மற்றும் 07.05.2014- இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய போதிலும் கேரளாவின் தடங்கல்களால் அந்த தீா்ப்பை செயல்படுத்த முடியவில்லை .

உச்சநீதிமன்றம் அவ்வப்போது வழங்கிய உத்தரவுகள், குறிப்பாக பேபி அணை மற்றும் பிரதான அணை ஆகியவற்றை பலப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை, கேரள அரசின் தடை மனப்பான்மை காரணமாக,செயல்படுத்த முடியவில்லை.

அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. இதன் விளைவாக, 27.02.2006 07.05.2014 தேதியிட்ட தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பேபி அணை மற்றும் பிரதான அணையை வலுப்படுத்துவது தாமதமாகி வருகிறது.

எனவே, உச்சநீதிமன்றத்தின் 27.02.2006 07.05.2014 தேதியிட்ட தீா்ப்புகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் வழிகாட்டுதல்கள்,வழிமுறைகளை காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்கு கேரளாவுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் தற்போதைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளாவைச் சோ்ந்த ஜோ ஜோசப் என்பவா் உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்துள்ளனா்.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.