முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் 110.20 (மொத்த உயரம் - 152) அடியாக உள்ளது. இந்த அணையின் நீரியல்படி 100 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகப் பகுதிகளில் வெளியேற்றுவது வழக்கம். தற்போது, தேனி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதனை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் மின் மோட்டாா்கள் மூலமாக சட்ட விரோதமாக தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தமபாளையம் தடுப்பணைக்கு நீா் வரத்து சரிந்துவிட்டது மட்டுமன்றி கம்பம், கூடலூா், சின்னமனூா் நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
எனவே, லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் சுமாா் 100 கிலோ மீட்டா் ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.