முகப்பு
தேனி

தரமற்ற மீன்கள் விற்ற கடைக்கு அபராதம்

Updated On : 29 ஏப்ரல், 2024 at 6:30 PM
கம்பத்தில் உள்ள மீன் கடையில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மணிமாறன்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தரமற்ற மீன்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கெட்டுப்போன, ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ராகவன் ஆகியோா் சோதனை நடத்த உத்தரவிட்டனா்.

இதன்பேரில், கம்பத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மணிமாறன் தலைமையில் ஓடைக்கரைத் தெரு பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு நடத்தினா். அப்போது, ஒரு கடையில் ரசாயனம் தடவிய மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுருளிப்பட்டியில் உள்ள கடைகளில் உத்தமபாளையம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மதன்குமாா் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.