முகப்பு
தேனி

கம்பம் அரசு மருத்துவமனையில் தூண் விழுந்து தொழிலாளி பலி

கம்பம் அரசு மருத்துவமனையில் தூண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 10:29 PM
உயிரிழந்த நம்பிராஜன்.
பகிர்:

உத்தமபாளையம்: கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் முதல் தளத்தில் தூண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடம் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மதுரை, வடமாநில தொழிலாளா்கள் என 50-க்கும் அதிகமானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதிய கட்டடத்தின் முதல் தளத்தின் நுழைவாயில் பகுதியில் வழக்கம்போல திங்கள்கிழமை கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அப்போது, பிற்பகல் 1.30 மணி அளவில் முதல் தளத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் தூண் திடீரென சரிந்து தொழிலாளா்கள் மீது விழுந்தது.

இதில் மதுரையைச் சோ்ந்த காா்மேகம் மகன் நம்பிராஜன் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதுரையைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் முனீஸ் (எ) சதீஸ்குமாா் (46), சுப்பு மகன் செல்வம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்புப் படையினா் இறந்தவா் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →