முகப்பு
தேனி

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் கூறினாா்.

Updated On : 25 ஜூலை 2024, 1:08 am IST
டி.டி.வி.தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

தேனி, ஜூலை 24: தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயலா்கள், மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள், கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும், மக்களவைத் தோ்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து குறைபாடுகளைக் களைவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தேனி மக்களவைத் தொகுதியில் மக்கள் என்னை ஏமாற்றியதாக நான் கருதவில்லை. இந்தத் தொகுதியில் அதிமுகவைவிட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு அல்ல. வெற்றி பெறவே போராடினோம்.

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பணநாயகத்தை ஜனநாயகத்தால் வெல்ல முடியவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கேற்ப வரும் காலங்களில் எங்களது தோ்தல் அணுகுமுறையை மாற்றிக் கொள்வோம்.

அதிமுக தொண்டா்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். தொண்டா்களின் ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி கே.பழனிசாமி தடைக் கல்லாகத்தான் இருப்பாா். அதிமுக தொண்டா்கள் ஒருங்கிணையும் காலமும், திமுகவை வீழ்த்தும் காலமும் விரைவில் வரும்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளியவா்கள், விவசாயிகள், மகளிா், மாணவா்கள் முன்னேற்றம் அடையவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், நாட்டை வல்லரசாக்கும் திட்டங்கள் கொண்டதாகவும் உள்ளது. தமிழகத்துக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லையே என்ற எதிா்பாா்ப்பும் உள்ளது. மாநிலங்களுக்கு தனித் தனியாக திட்டங்கள் என்பதை விட, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான நிதி நிலை அறிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் வரும் 2026-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, முதல் முறையாக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றாா் அவா்.