தேர்தல் முடிவை முன்கணித்த பஞ்சாங்கம்.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைகிறதா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளதைப் பற்றி...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்திருப்பது பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆட்சியை இழந்த திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 தொகுதிகளிலும், பாஜக, தேமுதிக அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
Advertisement
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.
இந்த நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்தது.
வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பு ஒரு வழியாக சற்று குறைந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 பேர் ஆதரவளித்துள்ளனர். மேலும், தவெக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சற்று வித்தியாசமாக தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை பஞ்சாங்கம் கணித்துள்ளது தமிழ்ப்புத்தாண்டு பஞ்சாங்கத்தில், கூட்டணி ஆட்சி என கூறப்பட்டுள்ளது.
அதாவது நிகழும் பராபவ தமிழ் வருடத்தின் ஆற்காடு பஞ்சாங்கத்தில், ஆண்டு பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பஞ்சாங்கத்தில் உள்ள பல கணிப்புகள்படி, ‘வரும் தமிழ் வருடத்தில் உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி தான் அமையும்’ என கூறப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 (107+5) ஆக உயர்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
ஆளுநர் இரண்டு நாள்களில் ஆதரவை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, விஜய்யால் பெரும்பான்மை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அரசமைப்பது தொடர்பாக திமுகவின் 2 ஆம் கட்டத் தலைவர்களுடன் அதிமுகவின் 2 ஆம் கட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தி புதிய கூட்டணியில் ஆட்சியமைக்கபோகிறார்களா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.