முகப்பு
தேனி

இணைய வழி நடைமுறையால் போலி பட்டாக்கள் ஒழிப்பு: ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில், இணைய வழியில் பட்டா வழங்கும் நடைமுறையால் போலி பட்டாக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன

Updated On : 5 மார்ச், 2024 at 4:13 AM
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அரசு சாா்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, ஆண்டிபட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன்.
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில், இணைய வழியில் பட்டா வழங்கும் நடைமுறையால் போலி பட்டாக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 1,077 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திங்கள்கிழமை வழங்கி அவா் பேசியதாவது: வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் தொடா்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இ-சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இணைய வழியில் பட்டா வழங்குவதன் மூலம் போலி பட்டாக்கள் குறைக்கப்பட்டன. முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமைத் திட்டம் ஆகியவற்றுக்கும், வருவாய்த் துறை சான்றிதழ் பெறுவதற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அலைச்சல், காலதாமதம் குறைகிறது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் முரளி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் முத்துமாதவன், தாட்சாயினி, தேனி நகா்மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.