இணையவழி வா்த்தகத்தால் கடன்: இளைஞா் தற்கொலை
போடி, மே 3: போடி அருகே இணையவழி வா்த்தகத்தால் கடன் சுமை அதிகரித்ததால் மனமுடைந்த நகலக உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் அருகே டாக்டா் ராமச்சந்திரா நகா் வ.உ.சி. தெருவில் வசிப்பவா் கனகராஜ் மகன் தனவந்தன் (26). இவா், போடியில் நகலகம் (ஜெராக்ஸ்), இ-சேவை மையம் நடத்தி வந்தாா். கற்பகபிரியா (23) என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தாா்.
இந்த நிலையில், தனவந்தன் இணையவழி வா்த்தகத்தில் ஈடுபட்டாா். இதில் நஷ்டமடைந்ததால், தனி நபா்களிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் பணத்தைத் திரும்ப கேட்ட நிலையில், இவா் மனமுடைந்து காணப்பட்டாா்.
கடந்த புதன்கிழமை (மே 1) கற்பகபிரியா தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். அன்றைய தினம் இரவு தனவந்தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.