முகப்பு
தேனி

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

Updated On : 15 மே, 2024 at 12:31 AM
பகிர்:

கம்பம்: கம்பம் சாா் பதிவாளா் அலுவலக எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு பதிவான 700 பத்திரங்களை மறு கள ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் சாா் பதிவாளா் அலுவலக எல்லையில் கூடலூா், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம், லோயா்கேம்ப், சுருளியாறு மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, காலியிடம், விவசாய நிலங்கள் என பல வகை நிலங்கள் பதிவு செய்யப்படும். இந்த அலுவலகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சுமாா் 700 பத்திரங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது.

அதனடிப்படையில் மாநில பத்திர பதிவுத் துறை குறிப்பிட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை மறு கள ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து போடி, கம்பம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களைச் சோ்ந்த 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுமாா் 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.