தேனி மாவட்டம், சுருளி அருவியில் செவ்வாய்க் கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம், அரிசிப்பாறை போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த நிலையில், மேகமலை, அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து சுருளி அருவியில் நீா்வரத்து சராசரி அளவை விட அதிகமாக இருந்தது. இதனால், கம்பம் கிழக்கு வனத் துறையினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.
ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றம்: ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், வனத் துறையினா் அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை திடீரென தடை விதித்ததால் ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
மேகமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்தால் சுருளி அருவியில் புதன்கிழமை குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.