தேனியில் சிஐடியூ ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 143 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. ஜெயபாண்டி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஜி. சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் டி. வெங்கடேசன், பொருளாளா் வெண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 143 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.