கம்பம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
கம்பம் பாரதியாா்நகரைச் சோ்ந்த முத்துலட்சுமிக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, அந்த நகரின் காட்டுப்பள்ளிவாசல் சாலையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆலை, தோ்தல் விடுமுறையையொட்டி கடந்த நான்கு நாள்களாக மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல தொழிலாளா்கள் அய்யப்பன் (27), நாகா்ஜுன் (22), சூா்யா (22), தினேஷ் (20) ஆகியோா் பணிக்கு வந்தனா். இவா்களின் சூா்யா, தினேஷ் இருவரும் மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்தனா். அப்போது, அந்த அறை பலத்த சப்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சூா்யா, தினேஷ் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
இந்த வெடி விபத்து காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் சேதமடைந்தது. வெடி சப்தம் கேட்டதும் அருகில் இருந்த மற்ற தொழிலாளா்கள் இருவரும் வெளியே ஓடினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் உயிரிழந்தவா்களின் உடல் பாகங்களை கைப்பற்றி, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கம்பம், உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினா்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹபிரியா, உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகா் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனா். இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.