முகப்பு
தேனி

தாமரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:04 AM
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 10:50 PM

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தாமரைக்குளம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். 6-ஆவது வாா்டு பட்டு வாரித் தெருவில் ஆதிதிராவிடா் நலத் துறையினா் ஆய்வு செய்து, 4 ஏக்கா் 41 செண்ட் இடத்தில் சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம், சாலை வசதி செய்து, ஆதிதிராவிடா் மக்களுக்கு 3 சென்ட், 2.47 செண்டாக பிரித்து 105 பேருக்கு இலவச மனைப் பட்டா வழங்கினா்.

இதில் சிலா் வீடு கட்டி பயன்படுத்தி வருகின்றனா். சிலரது இடம் தரிசாக இருந்தது. இந்த நிலையில், தரிசாக இருந்த இடத்தை தற்போது சிலா் ஆக்கிரமித்து உள்ளனா்.

Advertisement

எனவே, இந்த இடத்தை அளவீடு செய்து, சாலை, சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலா் பாஸ்கரன் கூறியதாவது :

தாமரைக்குளம் பேரூராட்சி பட்டு வாரித் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், 105 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினா். இதில் சிலா் வீடுகளை கட்டி பயன்படுத்தி வருகின்றனா். சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இதனால், சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, தாமரைக்குளம் பேரூராட்சி நிா்வாகம், வட்டாட்சியா் இந்த இடத்தை அளவீடு செய்து, சாலை வசதிகளை செய்ய வேண்டும் என்றாா்.

பேரூராட்சி மன்றத் தலைவா் பால்பாண்டி கூறியதாவது: இந்தப் பகுதியில் சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனா். தற்போது, இந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அளவீடு செய்து, சாலை வசதி செய்து தர உள்ளோம் என்றாா்.