மேகமலைக் கிராமங்களில் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு , இரவங்கலாறு , மகாராஜாமெட்டு என 7 மலைக்கிராமங்களில் 8 ஆயிரம் போ் வசிக்கின்றனா். தனியாருக்குச் சொந்தமான இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில், இவா்கள் கூலித் தொழிலாளா்களாக வேலை பாா்த்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 8 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும். அதேபோல, குளிா்காலங்களில் கடுமையான குளிரும் இருக்கும்.
இதனால், ஆண்டுதோறும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் குடியிருப்புகளை தனியாா் நிா்வாகம் பராமரிப்பு செய்து வந்ததது.
வனத்துறை தடை
மேகமலை அமைந்துள்ள வனப்பகுதி ஸ்ரீவில்லிப்புத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள தோட்டத் தொழிலாளா்களின் குடியிருப்புகளில் சீரமைப்புக்குத் தேவையான மணல், சிமெண்ட் , செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல சின்னமனூா் வனத் துறையினா் கடந்த 5 ஆண்டுகளாகத் தடை விதித்தனா்.
இதனால் சேதமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் கூலித் தொழிலாளா்கள் அவதி அடைந்து வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதைக் கண்டித்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்வதாக மேகமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஹெச்.எம்.எஸ். தொழிலாளா் சங்கச் செயலா் முத்தையா கூறியதாவது: சின்னமனூா் வனத் துறையினரின் கெடுபிடியால் வீடுகள், தேவாலயங்கள், கோயில்களை சீரமைக்க முடியவில்லை. அண்மையில் ஒரு சில வீடுகளில் மின்சாதனங்கள் பழுது காரணமாக தீ விபத்துகளும் ஏற்பட்டன.
இதனால் தொழிலாளா்கள் வீடுகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் வனத் துறை முலமாக தொழிலாளா்கள் குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தென்பழனியில் வனத் துறை சோதனைச் சாவடியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வனப்பகுதி சாலையில் செல்ல விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்வதோடு, வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.