தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளைச் சரிபாா்க்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்தது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது: வருகிற சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்துக்குள்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளைச் சரிபாா்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 3,013 வாக்குப் பதிவு எந்திரங்கள், 1,870 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,970 வாக்குப் பதிவு ஒப்புகை எந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 75 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் வருகிற 11-ஆம் தேதி நிறைவடையும். இதையடுத்து, வாக்குப் பதிவு எந்திரங்களின் சோதனை பணி நடைபெறவுள்ளது. வருகிற 15-ஆம் தேதிக்குள் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபாா்ப்பு, சோதனைப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றனா்.