தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 15) காலை 8 மணி வரை கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதியை முன்னிட்டு, ஜன. 14, 15-ஆம் தேதிகளில் தேனி மாவட்டம், குமுளி, கூடலூா், கம்பம் வழியாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தா்கள் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.
எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்ப்பதற்காக கம்பம், கூடலூா், குமுளி வழியாக கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் புதன்கிழமை (ஜன. 14) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை கம்பத்திலிருந்து கம்பம் புறவழிச் சாலை, கம்பம்மெட்டு வழியாக ஒருவழிப் பாதையில் கேரளத்துக்குச் செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.