செயல்படாத மின் கட்டண வசூல் மையம்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மின்நிலையத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையம் செயல்படாததால், பொதுமக்கள் கடந்த மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மின்நிலையத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையம் செயல்படாததால், பொதுமக்கள் கடந்த மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இதுபற்றி மனித உரிமைகள் இயக்கத் தலைவர் பார்த்தசாரதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: மல்லாங்கிணர் உபமின் நிலையத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின் உபயோகிப்பாளர்கள் பணத்தை செலுத்துவதற்காக மல்லாங்கிணர் உபமின் நிலையத்தில் இரண்டு மையங்கள் உள்ளன. அதில் ஒரு கவுண்டர் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. மற்றொரு கவுண்டரிலும் வாரத்தில் நான்கு நாள்கள் வசூலிப்பவர்கள் இல்லாததால் மூடப்பட்டு விடுகின்றது. இரண்டு நாள்கள் திறந்து இருக்கும். ஆனால் கணினி வேலை செய்வதில்லை. இதனால் மின் பயனீட்டாளர்கள் வாரம் முழுவதும் பணத்தை செலுத்த முடிவதில்லை.
Advertisement
கணினி குறித்த பட்டப்படிப்பு படித்தவர்கள் இங்கு இல்லாததால் மாதம் முழுவதும் கணினி பழுதடைந்த நிலையில் உள்ளது. மின் கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் விருதுநகர் சென்று தனியார் கணினி மையத்தில் கூடுதலாக ரூ. 20 கொடுத்து மின்கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். இதுபற்றி பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கணினி அறிவு பெற்ற பணியாளர்களை நியமனம் செய்து மாதத்தின் அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் மின்கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மல்லாங்கிணர் உபமின் நிலைய உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது கருத்து கூற மறுத்துவிட்டனர்.