பள்ளிக் கல்விக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பணி அளவிட முடியாது: மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் முதன்மைக் கல்வி அதிகாரி பகவதி தலைமையில்
விருதுநகர்பள்ளிக் கல்விக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பணி அளவிட முடியாது: மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் முதன்மைக் கல்வி அதிகாரி பகவதி தலைமையில்
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் கல்வித் தரம் மேலும் சிறப்படைய, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் எடுத்து வரும் முயற்சிகள் அளவிட இயலாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பகவதி கூறினார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் முதன்மைக் கல்வி அதிகாரி பகவதி தலைமையில் நடைபெற்றது.அதில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்து, ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதேபோல் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாவட்டத்தில் உள்ள பின் தங்கியப் பகுதியில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்காக பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக்குகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை கிடைப்பதற்கரிய வாய்ப்பாக கருதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
துணை வேந்தர் பி.கன்னியப்பன் பேசுகையில்: கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஊரகப் பகுதி ஏழை மாணவ மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்த பயிற்றுவித்தல், ஆராய்ச்சியில் ஈடுபடுதல், பெற்ற கல்வி ஆராய்ச்சிகளை கிராமங்களுக்குச் சென்றடைய விரிவாக்கம் செய்தல் என்ற மும்முனைக் கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் பேசுகையில் கூறியதாவது: கலசலிங்கம் பல்கலைக்கழகம்-பள்ளித் தொடர்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பள்ளி ஆசிரியர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற பகுதி நேர படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆராய்ச்சி செய்யவும் ஊக்குவிக்கப்படும். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சிக் கூடம் டைபாக்கோர் மத்திய அரசு உதவியுடன் ரூ.40 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழில் நுட்பமும் 5 ஆண்டுகள்தான். பின்னர் சிறப்பு பெற்ற தொழில்நுட்பம் வரும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்த தொழில் நுட்பங்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம். இங்கு சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் ஜாவா பயிற்சிக் கூடத்தை ரூ.2.75 கோடியில் அமைத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வர் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பயிற்சி எடுத்து பயன்படுத்தலாம். இங்குள்ள நூலகத்தில் 213 ஆன்லைன் ஜர்னல்கள் உள்ளன. இவற்றில் தற்போது ஆராய்ச்சி வளர்ச்சி, கல்வி கற்பிக்கும் முறைகள் போன்றவை உள்ளன. இதனைப் பயின்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு புதிய முறையில் பயிற்சி கொடுக்கலாம். இங்குள்ள 72 முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை பள்ளிகளில் கருத்தரங்குகளில் பேச அழைக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வைகுண்டபெருமாள், பழன்யாண்டி, சுப்பிரமணியம், அர்ஜூனன் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.