விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி விட்டதால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, இலுப்பையூர், விடத்தகுளம், மேலேந்தல், ஒட்டங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பருவமழையை நம்பி தங்கள் நிலங்களை செம்மைப்படுத்தி வைத்திருந்தனர்.
பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெல் மற்றும் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். ஆனால், பருவமழை பொய்த்து விட்டது. இதனால், பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை பொய்த்ததால், விடத்தகுளம், புதூர் ஆகிய கிராமங்களுக்கும் இடையை பொதுவான கண்மாய் வறண்டு மைதானமாக காட்சியளிக்கிறது. இந்த கண்மாய் தண்ணீரை நம்பி சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரும் கருகி வருவது விவசாயிகளுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி திருச்சுழி விவசாய சங்கத் தலைவர் தனபாலன் கூறுகையில், திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் பருவமழையை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை செம்மைப்படுத்தி நிலக்கடலை, நெல் பயிரிட்டோம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாததால் பயிர்கள் முற்றிலும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் விவசாயிகள் அனைவரும் கிராமத்தை காலி செய்து நகரங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.