ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தகர டப்பாவில் இருந்த வெடி பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் செண்பகத்தோப்பில் பகவதிநகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது.
இங்கு வசிக்கும் காளியப்பன் மகன் மகாலிங்கம் (8), பாண்டி மகன் மணிகண்டன் (8) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு தகர டப்பா கிடந்துள்ளது. அதை சிறுவர்கள் கல்லால் தட்டியுள்ளார்கள். அப்போது டப்பா பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதில் மகாலிங்கத்தின் கையிலும், மணிகண்டனின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மகாலிங்கம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மம்சாபுரம் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஷ்குமார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.