அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை புறநகர்ப் பகுதிகளில் காவல் துறையினர் சனிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், அவர் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் சங்கர் மகன் ராம்கி (25) என்பது தெரியவந்தது.
இவர், கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது மற்றும் தெருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதில், ராம்கி கடந்த சனிக்கிழமை காலை அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டார் எனத் தெரிய வந்துள்ளது. அதன்பேரில், போலீஸார் ராம்கியை கைது செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.