அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் உணவகத்திலிருந்த சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், அப்பகுதியில் உணவகத்துடன் தேநீர் கடையும் நடத்தி வருகிறார். திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதையடுத்து, இரவு 11 மணியளவில் இவரது கடையிலிருந்து பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது.
அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்ததில், சந்திரசேகரின் கடை தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. உடனே, சந்திரசேகருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
மேலும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
உணவகத்திலிருந்த 2 சமையல் எரிவாயு உருளைகளில் கசிவு ஏற்பட்டதே இந்த தீ விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.