சாத்தூரில் மினி பேருந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு
சாத்தூரில் மினி பேருந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாத்தூரில் மினி பேருந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாத்தூர் அருகே படந்தால், சத்திரபட்டி, சடையம்பட்டி, ஒ.மேட்டுபட்டி, வெங்கடாசலபுரம், ராமலிங்காபுரம், அம்மாபட்டி, சந்தையூர் ஆகிய பகுதிகளுக்கு தனியார் மூலம் 7-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்படு கின்றன. ஆனால், இப்பேருந்து ஓட்டுநர்கள் நகரின் பல்வேறு இடங்களில் நினைத்த இடத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் மினி பேருந்துகள் மீது மோதி, விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பிரதான சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
அவசர தேவைகளுக்காக செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலையை மினி பேருந்துகள் உருவாக்குகின்றன. இதனை போக்குவரத்து காவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து போலீஸார் முறையான நடவடிக்கை எடுத்து, மினி பேருந்து ஓட்டுநருக்கு
எச்சரிக்கை விடுத்து, இதுபோன்ற போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.