முகப்பு
விருதுநகர்

கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்ய கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசியம்மன் கோயில் அருகே உள்ள தெருக்களில் கழிவு நீர் வாய்க்காலை சுத்தப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 12:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசியம்மன் கோயில் அருகே உள்ள தெருக்களில் கழிவு நீர் வாய்க்காலை சுத்தப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 2 ஆவது வார்டுக்கு உள்பட்ட, பட்டத்தரசியம்மன் கோயில் அருகே உள்ள இரு தெருக்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் பல நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், அதில் செடிகள் வளர்ந்து கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பிரச்னை குறித்து நகராட்சி ஆணையாளரை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் சந்திக்க இயலவில்லை.
சம்பந்தப்பட்ட பிரிவு உயர் அதிகாரியை சந்தித்து முறையிட்டால் அன்று ஒரு நாள் மட்டும் கழிவு நீர் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்தத் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரு மாதங்களாகியுள்ளது. ஆனால் பழுது பார்க்க பள்ளம் தோண்டிய நிலையில், அதை அப்படியே போட்டுவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். கடந்த இரு மாதங்களாக இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, இப் பகுதி குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நகர் நல அலுவலரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட மேஸ்திரி மீது தொடர்ந்து புகார்கள் வருகிறது. பொதுமக்கள் எழுத்துப் பூர்வமாக இது குறித்து மனு அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.