விருதுநகர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புபவர்கள் செப். 28- க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டு தீபாவளி பண்டிகையானது நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் இந்திய வெடிபொருள் சட்டம் 2008-ன் படி, தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி மனு செய்ய விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பப் படிவத்தை, பட்டாசு விற்பனை செய்யும் இடத்திற்கான ஆவணங்கள், இடத்தின் வரைபடம் மற்றும் உரிமக் கட்டணம் ரூ.600 வங்கியில் செலுத்தியதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.