விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்கியதில் அதன் கண்ணாடி உடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவாகப் பேசி சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதை கண்டித்தும், சமூக வலை தளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்ய கோரியும் பாதிக்கப்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக காரியாபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளிப்பதற்காக பேரணியாக சென்றனர்.
இந்த நிலையில், மதுரையிலிருந்து அருப்புக் கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, காரியாபட்டியில் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது. அப்போது, மர்ம நபர்கள் சிலர், கல் வீசித் தாக்கியதில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, மாற்று பேருந்தில் பயணிகளை ஏற்றி அருப்புக்கோட்டைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஏராளமானோர் காரியாபட்டி காவல் நிலையத்தில் குவிந்தனர். அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அன்னராஜ், செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் காரணமாக காரியாபட்டியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.