விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி அண்ணா நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை திறக்கப்படாமலே சேதமடைந்து விட்டது.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் அண்ணாநகர் உள்ளது.
இதன் அருகே பெரியார் நகர், கஸ்தூரிபாய் நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த 1998-இல் அண்ணா நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பில் நியாய விலைக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அக்கட்டத்தை திறக்க கூட்டுறவுத் துறையோ, வழங்கல் துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கட்டடம் தற்போது சேதமடைந்து விட்டது.
இந்த நியாய விலைக் கட்டடம் திறக்கப்படாததால், பாண்டியன் நகரில் உள்ள நியாய விலைக் கடைக்கு சாலையை கடந்தே பொதுமக்கள் செல்லும் நிலை உள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் யார் பெயரில் உள்ளதோ, அவர்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வர வேண்டும் என விற்பனையாளர் அறிவுறுத்துகிறார். இதனால், வயதானவர்கள் மற்றும் பெண்கள் சாலையை கடந்து செல்லும் போது, விபத்தில் சிக்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது. எனவே அண்ணா நகர் பகுதியில் புதிதாக நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.