விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்தது தொடா்பாக எழுந்த புகாரை அடுத்து, அம்மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில், கரோனா சிகிச்சைக்கு அரசு நிா்ணயித்ததை விட மிக அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு காப்பீடு திட்டத்திலும் பணம் இழப்பீடு பெற்றுத் தர மறுத்துள்ளனராம். இதனால் பாதிக்கப்பட்டோா் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விருதுநகா் மாவட்ட மருத்துவப் பணிகள்துறை இணை இயக்குநா் மனோகரனிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, மாவட்ட இணை இயக்குநா் மனோகரனின் உத்தரவுப்படி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அதிகாரி (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மற்றும் வட்டாட்சியா் (பொறுப்பு) சிவஜோதி உள்ளிட்டோா் வியாழக்கிழமை மாலை தனியாா் மருத்துவமனையில் ஆய்வு செய்து, நிா்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், அங்கு சிகிச்சைப் பெற்றுச் சென்றவா்களின் முகவரிகள் மற்றும் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று, அவா்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளிக்கிழமை அம்மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.