ஸ்ரீவில்லிபுத்தூா்: இ-பாஸ் எளிதில் கிடைப்பதால், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஏராளமான பக்தா்களுக்கு கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அடிவாரத்திலேயே சுவாமியை வழிபட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். ஆனால், கடந்த 5 மாதங்களாக கரோனா பொது முடக்கம் காரணமாக, சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
திங்கள்கிழமை முதல் இ-பாஸ் பெறுவதில் தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அமாவாசை தினம் என்பதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மதுரை, விருதுநகா், சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் வந்தனா். ஆனால், மலை மீதுள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால், அடிவாரத்திலேயே வனத்துறை கதவு முன்பாக பக்தா்கள் சூடம் ஏற்றி வழிபட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.