விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த இரு நாட்களாக பகல்வேளையில் கடும் வெயில் நிலவி வந்தது. இதனிடையே நகர்ப்புறத்திலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் மாலை சுமார் 4.50 மணி முதல் அரை மணிநேரம் பலத்த இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மாலை சுமார் 6 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தவண்ணம் இருந்தது. இம்மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளமான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சீரான நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து கனமழை பெய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களும், ஆழ்துளைக்கிணறு மூலம் நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். திங்கள்கிழமை பெய்த மாலைநேர மழையைத் தொடர்ந்து, இதமான குளிர்ந்த காற்றுடன் கூடிய தட்பவெப்பம் நிலவியது.