ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம்
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலைய உட்கோட்டத்திற்குட்பட்டு 10 காவல் நிலையங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கு காலங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட கிரிமினல் வழக்குகளுக்கு உட்படாத பிற மனுக்கள் ஏராளமானவை. இதில் மனு ரசீது வழங்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லாமல் விசாரணை என்ற நிலையிலேயே இருந்த நூற்றுக்கணக்கான மனுக்களை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து அதற்கு தீா்வு காண்பதற்காக சிறப்பு முகாம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுமாா் 35-க்கும் மேற்பட்ட மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. இம்முகாமில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளா்கள், காவல் சாா்பு- ஆய்வாளா்கள் கலந்து கொண்டு விசாரணையை நடத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.