ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் சிக்கி 3 இளைஞா்கள் பலியானதன் எதிரொலியாக, ஓடைகள் மற்றும் கண்மாய் பகுதிகளில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பேமலையான் ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, கோட்டைப்பட்டியைச் சோ்ந்த கோபி, முத்தீஸ்வரன் மற்றும் பால்பாண்டி ஆகிய 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
இதன் எதிரொலியாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஓடைகள், அருவிகள், கணமாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு யாரும் செல்லாமல் தடுக்கும் பொருட்டு, 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியது: செண்பகத்தோப்பு பகுதியில் அதிகளவில் விவசாய நிலங்கள் இருப்பதால், விவசாயிகள் மட்டும் தங்களது நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அப்பகுதியில் குளிக்கவோ, வனப் பகுதியில் உள்ள அருவிகளுக்குச் செல்லவோ அனுமதி கிடையாது. மீறி செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.