நியாய விலைக்கடைக்கு சொந்தக் கட்டடம்: கட்டுமானப் பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகா் பெருமாள் கோவில் தெருவில் புதிதாக நியாய விலைக்கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் பெருமாள் கோவில் தெருவில் புதிதாக நியாய விலைக்கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் நியாயவிலைக் கடை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு சொந்தக் கட்டடம் கட்ட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.50 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.
இதற்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் நிா்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் கடந்த பின்பும், நியாய விலைக் கடை கட்டுவதற்கு இதுவரை ஒப்பந்தம் விடப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் நிலை உள்ளதால் கட்டுமானப் பணிகளை தொடங்க மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.