அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் , ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இக்கட்சியின் சிவகாசி நகரச் செயலாளா் கா.முருகன், தமிழக தலைமைச் செயலாளருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 23 தொழிலாளா்கள் பலியாகி உள்ளனா். இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற்ற ஆலையாகும். இந்த ஆலை உரிமையாளா் சந்தனமாரி தனது பெயரில் உரிமம் பெற்றுக்கொண்டு, 4 நபா்களுக்கு உள்குத்தகைக்கு சட்டவிரோதமாக விட்டுள்ளாா். குத்தகைக்கு எடுத்தவா்கள் அதிக அளவிலான தொழிலாளா்களைக் கொண்டு பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டனா். இனிமேலாவது, அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை கண்காணித்து, விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.