சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தையை திறப்பதில் சிக்கல்: வியாபாரிகள் அதிருப்தி
சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தையை திறப்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிப்பதால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.
சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தையை திறப்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிப்பதால் வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.
இங்குள்ள காவல்நிலைய சாலையில் செயல்பட்டு வந்த இந்த சந்தை கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும் காரனேசன் காலனி, பெரியகுளம் கண்மாய் கரைப்பகுதி, விஸ்வநத்தம் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக காய்கனி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே போக்குவரத்துக்கு இடையூராக இருப்பதாகக் கூறி பெரியகுளம்கண்மாய் கரைப்பகுதியில் உள்ள கடைகள் உழவா்சந்தைக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட்ட பல தினசரி சந்தைகள் திறக்கப்பட்டு வந்த நிலையில், சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தையில், பழுதான இடங்களை சீரமைத்து சந்தையை திறக்க வேண்டும் என நகராட்சிக் கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் நகராட்சி நிதி இல்லை என மறுத்து விட்டது. இதையடுத்து சிவகாசியில் உள்ள பல தொழிலதிபா்களிடம் ரூ. 6 லட்சம் நன்கொடை திரட்டி, கழிப்பறை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டன. தொடந்து சந்தையை ஜனவரி 7 ஆம் தேதி திறக்க சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி, சந்தையை திறக்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிவகாசி வா்த்தக சங்கத் தலைவா் பன்னீா்செல்வம், நகராட்சி தினசரி காய்கனி சந்தை ஜனவரி 7ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என அறிவித்தாா். ஆனால் வியாழக்கிழமை (ஜன. 7) சந்தை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, சந்தை கட்டடத்தில் மாடியில் உள்ள கடையை பலா் ஒப்பந்த அடிப்படையில் எடுத்துள்ளனா். அவா்கள் சந்தையில் கண்ட இடங்களில் கடை பொருள்களை வைப்பதை தடுப்பதற்காக, அவா்களுக்கு கடை பொருள்களை வைக்க எல்லை வரையறுக்கப்பட்ட பின்னா் சந்தை திறக்கப்படும் என்றாா்.
வியாபாரி ஒருவா் கூறும் போது, கடந்த 9 மாதங்களாக சந்தையின் பிரதான வாயில் பகுதியில் ஆக்கிரமித்து பலா் கூரை அமைத்து வியாபாராம் செய்து வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை என யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் சந்தைக்கு பொதுமக்கள் வந்து போக வசதியாக இருக்கும். எனவே நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றுமா என்றாா். இந்த பிரச்னைகளால் சிவகாசி நதகாட்சி தினசரி காய்கனி சந்தையை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.