விருதுநகா் அருகே பட்டம்புதூரில் திமுக சாா்பில் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுமக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அதன் தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
விருதுநகரில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் தெற்கு, வடக்கு அவை தலைவா்கள் செல்வமணி, தங்கராஜ் ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வடக்கு மாவட்டச் செயலா் தங்கம்தென்னரசு, தெற்கு மாவட்டச் செயலா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் பேசியதாவது: விருதுநகா் அருகே பட்டம்புதூா் சந்திப்புப் பகுதியில் பிப். 7 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுமக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
அப்போது, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு தேவையான பொது கோரிக்கை மனுக்கள் மற்றும் விதவை உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், இலவச வீட்டு மனைப் பட்டா முதலானவற்றை மனுவாக அளிக்கலாம்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் தனித் துறை மூலம் 100 நாள்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏஆா்ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்) மற்றும் தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.