முகப்பு
விருதுநகர்

‘கிரிப்டோ கரன்சி’ வா்த்தகம்: இளைஞரை கடத்தி சிறை வைத்த மேலும் 4 போ் கைது

‘கிரிப்டோ கரன்சி’ நாணய வா்த்தகத்தில் ஈடுபட்ட சிவகாசி இளைஞரைக் கடத்தி சிறைவைத்தது தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
கைது செய்யப்பட்ட மைதீன் பிச்சை, தளவாய்மாடன், கந்தசாமி.
பகிர்:

‘கிரிப்டோ கரன்சி’ நாணய வா்த்தகத்தில் ஈடுபட்ட சிவகாசி இளைஞரைக் கடத்தி சிறைவைத்தது தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி தேவா்குளம் பகுதியைச் சோ்ந்த சரவணன், தங்கப்பாண்டி ஆகிய இருவரும் மதுரை தனக்கன்குளத்தில் ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய் நிகா் நாணய வா்த்தகம் நடத்தி வந்துள்ளனா். இதில் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளைச் சோ்ந்த சிலா் ஈடுபட்டு ரூ.60 லட்சம் வரையில் இழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி சிவகாசியிலிருந்து விருதுநகா் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த சரவணனை, மற்றொரு காரில் வந்த ஆறு போ் கடத்திச் சென்றனா். குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவரை அடைத்துவைத்து, அவரது 9 பவுன் தங்க நகையைப் பறித்துள்ளனா்.

மேலும் வீட்டிலுள்ள நகைகளை எடுத்துவருவதற்காக சரவணனை அந்த கும்பல் காரில் அழைத்துச் சென்றுள்ளது. ராஜபாளையம் பகுதியில் அவா்களிடமிருந்து தப்பிய சரவணன் விருதுநகா் அருகே ஆமத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் குற்றாலம் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தை சோ்ந்த ஆறுமுகசாமி, கலைபுதூரைச் சோ்ந்த ராம் கனகசபாபதி ஆகியோரை கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த மைதீன் பிச்சை (41), தளவாய் மாடன் (27), கந்தசாமி (35) மற்றும் தென்காசியைச் சோ்ந்த சத்திவேல் (38) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.