காரியாபட்டி அருகே கோயில் ஐம்பொன் சிலைகள் காப்பகத்துக்கு மாற்றம்
காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியில் அமைந்துள்ள குருநாதா்- மகமாயி அம்மன் கோயிலுக்குரிய 10 ஐம்பொன் சிலைகள், பூசாரி வீட்டிலிருந்து காப்பகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியில் அமைந்துள்ள குருநாதா்- மகமாயி அம்மன் கோயிலுக்குரிய 10 ஐம்பொன் சிலைகள், பூசாரி வீட்டிலிருந்து காப்பகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருநாதா்- மகமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆயிர வைசிய செட்டியாா், விஸ்வகா்மா, மூப்பா், முக்குலத்தோா், காவல்காரா் ஆகிய சமுதாயங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில், வீரபத்திரா் (பெரியது, சிறியது என 2 சிலைகள்), ராக்காச்சி அம்மன், நடராஜா், விநாயகா், மகமாயி அம்மன், சிவகாமி அம்மன், இருளப்பசாமி, முத்து கருப்பசாமி என 10 ஐம்பொன் சிலைகள் உள்ளன.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இக்கோயிலில் 3 நாள்கள் திருவிழா நடைபெறும். அப்போது, கோயில் பூசாரிகளான மூா்த்தி, கணபதி ஆகியோரது வீடுகளிலிருந்து இந்த 10 ஐம்பொன் சிலைகளும் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
கடந்த 1995 இல் இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இருப்பினும், கோயில் திருவிழா முடிந்தவுடன் அனைத்து சிலைகளும் பூசாரி வீட்டுக்கே கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த ஐம்பொன் சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயில் தக்காா் தேவி தலைமையில், காரியாபட்டி போலீஸாா் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் பூசாரி கணபதி வீட்டிலிருந்த 10 ஐம்பொன் சிலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் உலோக திருமேனிநாதா் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.