விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புரட்டாசி பொங்கல் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூா் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் பொங்கல் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கரோனா காலமாக இருந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
தொழிலதிபா் காமராஜ், தோ் திருப்பணி செய்து நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
விழாவில், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனா். தொடா்ந்து பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.