முகப்பு
விருதுநகர்

அரசுப் பள்ளியில் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளுக்கு தலா ரூ.1000

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள வட மாநில தொழிலாளர் குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1000 மற்றும் அரிசி, அரசின் விலையில்லா புத்தகப் பை, சீருடை உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 19 அக்டோபர், 2021 at 5:33 PM
புலம் பெயர்ந்த தொழிலாளர் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் தலா ரூ.1000, அரிசி மற்றும் அரசின் விலையில்லா பொருட்களை வழங்கும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:54 AM

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள வட மாநில தொழிலாளர் குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1000 மற்றும் அரிசி, அரசின் விலையில்லா புத்தகப் பை, சீருடை உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது.

தோப்பூர்-பண்ணையில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இக் கிராமத்தில் உள்ள அனைத்து 1 முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவ மாணவியரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராமத்தின் அருகில் உள்ள நூற்பு ஆலைகளில் அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பலர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களது பள்ளி வயதுக் குழந்தைகள், பள்ளி செல்லாமல் தங்களது தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டு மில்லில் விளையாடிக் கொண்டு திரிந்தனர். இது குறித்து அறிந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் மில்லுக்கு நேரடியாகச் சென்று தொடர் முயற்சி மேற்கொண்டதன் பேரில் பெற்றோர் தங்களது பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.

Advertisement

இதன் தொடர்ச்சியாக இவர்களை பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது.  ஆசிரியை வசந்தி வரவேற்றார்.

வட மாநிலங்களைச் சேர்ந்த 6 மாணவ மாணவியரை, பள்ளியில் சேர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இணையதளம் வழியே இவர்களின் சேர்க்கையை உறுதி செய்து அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.

மேலும் இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 என்ற தலைமை ஆசிரியரின் அறிவிப்பைத்  தொடர்ந்து இவர்களுக்கு தலா ரூ.1000, அரிசி மற்றும் அரசின் விலையில்லா புத்தகப் பை, சீருடை உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியர் வழங்கினார்.

மேலும் தலைமை ஆசிரியர் கூறுகையில், இவர்களுக்கு ஹிந்தியில் பாடங்கள் கற்றுக் கொடுப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலம் தன்னார்வலரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.